"தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வர முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் முதலமைச்சராக ஒருபோதும் வர முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்ததாக தெரிவித்தார். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவதாகவும், அவரின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குவங்கி இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்ததை சுட்டிகாட்டிய முதலமைச்சர், இதை விட அக்கட்சிக்கு அவமானம் இல்லை என்றும் கூறினார். கூட்டணி தர்மத்தின் படி திமுக செயல்படவில்லை என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் கள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா உருவாக்கப்படும் என்றும், அவர் கூறினார்.
