Tiruppur | பல்லாயிரம் கோடியில் தொழில் செய்யும் திருப்பூருக்கு தீராத தலைவலி... - குமுறும் மக்கள்

பல்லாயிரம் கோடியில் தொழில் செய்யும் திருப்பூருக்கு தீராத தலைவலி... - குமுறும் மக்கள்

பல்லாயிரம் கோடியில் தொழில் செய்யும் திருப்பூருக்கு தீராத தலைவலி... "கொஞ்சம் மிஸ்ஸானா குழந்தை மேல் வண்டி ஏறியிருக்கும்" - குமுறும் திருப்பூர் மக்கள் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், திருப்பூரில் 3 இடங்களில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் இரு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள பாலம் மட்டும் பணி நிறைவடையாமல் உள்ளது. இது முக்கிய மற்றும் பெருமளவு வாகனங்கள் செல்லக்கூடிய பகுதியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர் மக்கள்.. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியது முதல், 3 முறை நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, பணி நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக நடந்தது. அதே போல, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பாலத்தை இடித்து அகற்றும் பணி தாமதமானதும் இதற்கு காரணமாம்... அதன் பின் ஒரு வழியாக பாலத்தின் வடக்கு பகுதி பணிகள் நிறைவு பெற்றது. தற்போது தெற்கு பகுதியில் கட்டுமானப் பணி துவங்கி நடந்து வரும் நிலையில், ஆற்றின் மையத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு, ஒரு பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 75% அளவிலான பணிகள் நிறைவடைந்தாலும், மீதமுள்ள பணிகள் கிடப்பிலேயே உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செல்லக்கூடிய பாதையும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் இருப்பதால், வாகனங்கள் செல்வதில் பெரும் அவதி ஏற்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் மின்விளக்கு வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பால வேலைகளை விரைவில் முடித்து, வசதியான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தந்திடிவி செய்திகளுக்காக திருப்பூரிலிருந்து செய்தியாளர் அருண்குமார்...

X

Thanthi TV
www.thanthitv.com