8 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற மகனை 8 நொடியில் கழுத்தறுத்து கொன்ற தாய் - கொடுத்த வாக்குமூலம் தான் கொடூரத்தின் உச்சம்

x

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தவமிருந்து பெற்ற குழந்தையை, பிறந்த ஒரு மாதத்திலேயே தாயே கழுத்தறுத்து கொன்ற சம்பவம், மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தாய் அளித்துள்ள வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தையில்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு, கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது...

பிறந்த ஒரு மாதத்திலே, திடீரென தொட்டில் சேலை குழந்தையின் கழுத்தை இறுக்கியதில், குழந்தை உயிரிழந்ததாக கூறி குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் மருத்துவமனைக்கு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

விசாரணையில், அனைத்தும் அவர் அரங்கேற்றிய நாடகம் என்பதும், தாயே குழந்தையை பிளேடால் கழுத்தறுத்து கொன்றதும் அம்பலமானது உறவினர்களை அதிர்ச்சியில் உறைந்து போக செய்திருக்கிறது...

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சல்லக்குளத்தை சேர்ந்தவர் சிவராஜ்... இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவிதா என்பவருடன் திருமணமான நிலையில், சிவராஜ் எலக்ட்ரீசியனாகவும், ஜீவிதா தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்...

இந்நிலையில், திருமணமான 8 ஆண்டுகளும் குழந்தையில்லாமல் தம்பதி தவித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜீவிதா கர்ப்பம் தரித்திருக்கிறார்...

மகிழ்ச்சியில் குதூகலம் அடைந்த தம்பதி, தங்களின் 8 ஆண்டுகால மன வலியை மறக்க செய்யும் அளவில் கடந்த ஒராண்டு பெரும் சந்தோஷத்தில் இருந்துள்ளனர்...

கடந்த மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜூவிதாவுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது...

மருத்துவமனை சிகிச்சைகள் எல்லாம் நிறைவு பெற்று தம்பதி குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், குழந்தை அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அழுதும், உடல் முழுவதும் சரும நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளானதாகவும் தெரிகிறது...

இதனால், விரக்தியடைந்த ஜீவிதா குழந்தையை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்று, தொட்டில் சேலை குழந்தையின் கழுத்தை இறுக்கி ரத்தம் வந்ததுபோல் செட்டப் செய்து நாடகமாடியுள்ளார்.

உடனே, பதறிப்போய் சிவராஜூம், உறவினர்களும் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நிலையில், செல்லும் வழியிலே குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது...

மருத்துவமனையில் வைத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர்...

போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், திணறிப்போன ஜீவிதா, ஒரு கட்டத்தில் அனைத்தையும் ஒப்புக்கொண்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்...

இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் திருமணமான தம்பதிக்கு 4 வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், இதனால் ஏற்பட்ட தகராறில் கணவன் தாக்கியதில் மனமுடைந்த பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டதும், பேத்தி இறந்த துக்கத்தில் மூதாட்டியும் உயிரிழந்த துயரம் மறுபக்க துயரம்...

பாகுபாடற்ற அரவணைப்பு, தன் பார்வையாலும், குணத்தாலும் எதையும் அழகாக்கி பார்க்கும் பேரன்பு குணம் என வாழும் தெய்வமாக போற்றப்பட்ட தாயே, பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தறுத்து கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்