தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய 92 ஆயிரம் கோடி ரூபாயை, தவணை முறையில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அடுத்த வாரம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்துள்ளார். ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் 1999- ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு நிறுவனங்களும் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை அளவிற்கு ஏற்ப இந்த உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.