தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. எஞ்சிய, ஒன்பது மாவட்டங்களின் வார்டு மறுவரையறை உள்ளிட்ட தேர்தல் பணிகள், அடுத்த மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பணிகள் தொடங்குகிறது. தேர்தல் மற்றும் தேர்வு பணிகள் ஒரே சமயத்தில் வருவதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பயிற்சி என்ற பெயரில் நாட்களை வீணடிக்காமல் தேர்தல் நாளன்று மட்டும் ஆசிரியர்களை பயன்படுத்தும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.