

திசுக்களில் மின்சாரம் தாக்கிய ஆதாரம் இல்லை என்பதால் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என தெரிவிக்கமுடியாது என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மனித உரிமைகள் ஆணையத்தில் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமாரும் புழல் சிறையில் மின்சார வயரை கடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி காவல்துறை, சிறைத்துறை, மருத்துவ துறைகளை சேர்ந்தவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். குறிப்பாக ராம்குமார் உடலில் உள்ள திசுக்களை சோதனை செய்த மருத்துவர்கள் , அவர் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என அறிக்கை வெளியிட்டதால் இந்த வழக்கு மீண்டும் புயலை கிளப்பியது. இந்த நிலையில், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் செல்வகுமார், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட 3 மணி நேர விசாரணையில், அறிக்கையில் குறிப்பிட்ட படி திசுக்களில் மின்சாரம் தாக்கியதற்காக ஆதாரம் இல்லை என்பதால் மட்டும் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என கூற முடியாது என கூறியிருக்கிறார். 6மேலும் ராம்குமார் உடலில் இருந்த மின்சார தீக்காயங்கள் மற்றும் தடய அறிவியல் துறையின் மின்வேதியியல் அறிக்கையின் அடிப்படையிலே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்தேன் என கூறியிருக்கிறார். ராம்குமார் உடலில் 12 விதமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 9 வது காயம் 18 சென்டிமீட்டர் நீளத்தில் இருப்பதால் அது ஒரு நபரால் ஏற்படுத்த முடியாது என்றும் மருத்துவர் செல்வகுமார் தெரிவிக்கிறார். அடுத்த கட்டமாக பிரேதப் பரிசோதனை செய்யும்போது உடன் இருந்த மருத்துவர் பாலசுப்ரமணியம் மற்றும் சிறைத்துறை மருத்துவர் நவீன் ஆகியோரையும் விசாரணை செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவர் பாலசுப்ரமணியம் உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததால் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.