மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
நேற்று, நாகை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விழுந்தமாவடியைச் சேர்ந்த மீனவர்களை, கடுமையாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்துச் சென்றனர்.
இந்தநிலையில், இன்று மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகை செருதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கந்தவேல், முருகானந்தம் ஆகிய 3 பேரும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தலை, கால், கை உள்ளிட்டவற்றில் வெட்டு வாங்கிய தமிழ்ச்செல்வன், ரத்தவெள்ளத்தில் படகிலேயே மயங்கி விழுந்தார். படகில் இருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை, கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள், மூன்று பேரும் இன்று காலையில் கரை திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
