

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, மூன்று மாத ஆண் குழந்தையை, தந்தையே மூச்சை அடைத்து கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்த கேசவனுக்கும், அபிராமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அபிராமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறுக்காக தாய் வீட்டில் இருந்த அவரை குடும்பம் நடத்த வருமாறு கேசவன் அழைத்துள்ளார். அதற்கு, அபிராமி வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கேசவன், தனது 3 மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்றதுடன் துணியை வைத்து அழுத்தி குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் போலீசார், கேசவனை கைது செய்தனர்.