Salem Attack| பானிபூரி விற்ற உ.பி. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை
Salem Attack | பானிபூரி விற்ற உ.பி. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை தாய், தந்தையின் சிகிச்சைக்காக துயரப்பட்ட சிறுவன் மீட்பு சேலத்தில், தாய், தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக பானிபூரி விற்பனை செய்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிறுவனை, முதியவர் தாக்கியதாக கூறிய வீடியோ வைரலான நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராமு என்ற 14 வயது சிறுவன், சேலம், திருவாக்கவுண்டனூர் நெடுஞ்சாலை ஓரத்தில் பானிபூரி கடை நடத்தி வந்தார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள இவரது தாய், தந்தை தீவிர உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தமது சகோதரி வீட்டில் தங்கி சிறுவன் ராமு, பானிபூரி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி வந்துள்ளார். இந்தநிலையில், சாலையோரம் கடை போடக்கூடாது என்று முதியவர் ஒருவர் அடித்து விரட்டுவதாக சிறுவன் பேசும் வீடியோ வெளியாகி, காண்போரை கலங்கச் செய்தது. வீடியோவை பதிவு செய்த இளைஞர், சிறுவனை தாக்கிய முதியவரிடம் விளக்கம் கேட்ட போது அவர் தெனாவட்டாக பதில் அளித்திருந்தார். சிறுவன் கண்ணீருடன் பேசும் வீடியோ வைரலான நிலையில், களத்தில் இறங்கிய சிறார் உதவி மைய அதிகாரிகள் ராமுவை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்துள்ளதோடு, அவரது படிப்பை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனிடையே, ராமுவை படிக்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வதால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாய், தந்தையருக்கு பணம் அனுப்ப முடியாத சூழல் உருவாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள அவரது சகோதரி, தங்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்...
