ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க கட்டுப்பாடுகள் விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளை வகுத்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். அதன்படி கொரோனா பாதிப்பில் 'ஹாட் ஸ்பாட்' பகுதி என அரசு அறிவித்துள்ள இடங்களில் உணவு விநியோகிக்க கூடாது என்றும், ஏழைகளுக்கு உணவு வழங்கும் போது சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். உணவு வழங்கும் இடத்தை முன் கூட்டியே சுத்தப்படுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், உணவு வழங்கும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.