

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், இடம்பெற்ற வாசகங்களை நீக்குவது தொடர்பான தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிட கழக துணை தலைவர் துரைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் எனபது வரலாற்று உண்மை என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தக்த்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்று உண்மைகளை எப்படி மறைக்க முடியாதோ, அதே போல தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
மேலும், இது போன்ற வரலாற்று உண்மைகளை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
==========