

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அவரால் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தனது பெயர் இல்லாததற்கான காரணம் என்னவென்று கேட்டிருந்தார். அதற்கு, உரிய பதில் கிடைக்காததால், தகவல் ஆணையத்தில் மாசிலாமணி முறையிட்டார். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்களை தாங்கள் நீக்கவில்லை என்றும், கணினியே தானாக அழித்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளாத தகவல் ஆணையம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அபராதத் தொகையை, மாசிலாமணிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.