

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையிலுள்ள நட்சத்திர விடுதிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புத்தாண்டு கொண்ட்டாடங்களுக்கு பல்வேறு கட்டுபாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவு ஒருமணியோடு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொள்ளவேண்டும், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்களை கையாள்வதற்கு பெண் பாதுகாவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக கால்டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து போதிய அளவிலான கார்களை ஹோட்டல்கள் முன்பு, முன்கூட்டியே நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீச்சல் குளம் அருகே கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்றும், அதிகம் மது அருந்தியவரை வெளியேற்ற முறையான ஆட்களை அமர்த்த வேண்டும் எனவும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.