தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றம், மழை நீர் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால்,
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
வைரஸ் காய்ச்சலின் தன்மையை கண்டறிய மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளோடு
சிகிச்சை பெற வரும் நோயாளியின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதித்த பிறகு புதிய வகை வைரஸ் கிருமி கண்டறியப்பட்டால் அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம், மற்ற நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும்...
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசத்தை தாமாக அணிந்து கொள்வது பாதுகாப்பானது...
கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது அவசியமானது எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
