

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கனமழையால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் கழிவுநீருடன் சேர்ந்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. .
கோவையில் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், பெரியநாயக்கன் பாளையம், சூலூர், வாளையார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை தொடர்வதால், பூண்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆதிவாசி மக்கள், வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனிடையே, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சித்திரைச்சாவடி அணையில் இருந்து புதுக்குளம், உக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.