"தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் உள்ளிட்ட கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை 3 முதல் 3.3 மீட்டர் வரை கடல் அலை உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com