Pudukottai Flight | நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் - நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி பேட்டி

புதுக்கோட்டை அருகே சிறிய ரக பயிற்சி விமானம், தொழில்நுட்பக்கோளாறு மற்றும் இறக்கை உடைந்ததன் காரணமாக, திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அந்த விமானம், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அம்மா சத்திரம் அருகே பயங்கர சத்தத்துடன் தரை இறங்கியது. தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், விமானத்தில் இருந்த விமானியையும், உடன் வந்த பயிற்சி பெறுபவரையும் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் சேலத்தில் உள்ள விமான பயிற்சி பள்ளியில் இருந்து வந்த அவர்கள், திருச்சி வான்வெளியில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கம் செய்தபோது, விமானத்தின் இறக்கைகள் உடைந்து விட்டதாகவும், எரிபொருள் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜு தலைமையிலான அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com