காவு வாங்கிய வேகம்..சுக்கு நூறாக நொறுங்கிய கார்..உடல் நசுங்கி பலியான 2 பேர் | Natham
கேரள மாநிலம் மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் குன்னி கண்ணன் (வயது 65) அவரது குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வினி (வயது 29) அஞ்சலி (31) ஷிவானி (4) அஜித்தா (40) அருந்ததி 18, செபின் (45) ஷோபனா (61) ஆகிய 11 பேரும் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்துள்ளனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் சென்று பின்னர் தஞ்சாவூர் செல்வதற்காக மதுரையில் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்தடுப்பில் மோதியதில் காருக்குள் இருந்த செபின் (வயது 45) ஷோபனா (வயது 61) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த ஒருவரின் உடல் காருக்குள் சிக்கி கொண்டது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காருக்குள் இருந்து இறந்தவர் உடலை மீட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்ட நத்தம் போலீசார் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
