Namakkal | TN Police | கல்லூரி பேருந்து - இருசக்கர வாகனம் மோதி 4 மாணவிகள் பரிதாப பலி

Namakkal | TN Police | கல்லூரி பேருந்து - இருசக்கர வாகனம் மோதி 4 மாணவிகள் பரிதாப பலி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சக்கராம்பாளையம் பிரிவு சாலையில், கல்லூரி பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கராம்பாளையம் போயர் தெரு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகளான தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா ஆகிய மூவரும் பள்ளி முடிந்ததும் ஒரே டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ராசிபுரம் திருவள்ளுவர் கல்லூரியில் பயிலும் சுபிதா என்ற மாணவி லிப்ட் கேட்கவே, அவரை ஏற்றிச் சென்றுள்ளனர். சக்கராம்பாளையம் பிரிவு சாலை அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த முத்தாயம்மாள் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு மாணவிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்ற இரு மாணவிகள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த சுபிதா கல்லூரி மாணவி என்பதும், தனுஸ்ரீ, நிவேதா மற்றும் அபிநயா ஆகிய மூவரும் 6, 7 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் பள்ளி மாணவிகள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com