முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் மீது தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவதூறு பரப்பியது தொடர்பாக மன்னிப்புக் கேட்க ,இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கு இருவரும் பதில் அளிக்காத காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தில், பிரமாண வாக்கு மூலத்தையும் , 83 ஆண்டுக்கான விவரங்கள் மற்றும் மூலப்பத்திரம் ஆகியவை முரசொலி அறக்கட்டளை சார்பாக தாக்கல் செய்ததாகவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், இருவரும் கவுரவம் பார்க்காமல், தவறுக்கு மன்னிப்பு கோரினால் திமுக தலைவர் ஸ்டாலின்அனுமதியோடு வழக்கை வாபஸ் பெறுவேன் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.