

கர்நாடகா அணைகளில் இருந்து வரும் நீர், மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசனத்துக்கு வழங்கப்படுகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை, முழுக் கொள்ளளவை எட்டும் போது, அங்கிருந்த உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரியிருந்தனர். இதை கருத்தில் கொண்ட முதலமைச்சர், மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தின் மூலம், 100 வறண்ட ஏரிகளுக்கு 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் வழங்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இருப்பாளி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.