

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா, பட்டியலின மக்களை புண்படுத்தும் வகையில் மீரா மிதுன் பேசி இருப்பது சமுதாயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். இதில் பாலின ரீதியான முன்னுரிமை வழங்க கூடாதெனவும், தற்போது ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே போல மீரா மிதுனின் நண்பர் சாம் அபிசேக்கும் எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர்தான் எனவும் வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி செல்வகுமார், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிசேக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.