

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஜோதிமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 176 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாகவும், தனது தோள்பட்டையில் உள்ள 40 சதவீத குறைபாடு காரணமாக, தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான சான்றிதழை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேர, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த நிலையில், மனுவை மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் நிராகரித்து விட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். வரும் 5 ஆம் தேதி நடைபெறும், மருத்துவ கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிக்கான இடஒதுக்கீட்டின் கீழ் பங்கேற்க, தனக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுவுக்கு சுகாதாரத் துறை செயலர் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தார்.