சென்னை அமைந்தகரையில் பிரபல துணிக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மைலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் அமைந்தகரை மேத்தா நகரில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அஷ்ரப் அலி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார் நந்தகுமாரை கைது செய்து விசாரணை செய்ததில், மிரட்டி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நந்தகுமார் இதேபோல் பல பேரிடம் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.