Madurai || நரம்பு பிரச்சனைக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
Madurai || நரம்பு பிரச்சனைக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மதுரையில், நரம்பு சம்பந்தமான பிரச்சனைக்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர், பக்கவாதம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று உயிரிழந்த சம்பவத்தில், காவலர்கள் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை மேல அனுப்பானடி TNHB காலனியைச் சேர்ந்த 54 வயதான பரமசிவத்துக்கும், பக்கத்து வீட்டினருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, அடிதடியாக மாறியது. இதுதொடர்பாக இருதரப்பினரையும் சிந்தாமணி போலீசார் விசாரணைக்கு அழைத்து வழக்குப்பதிவு செய்து, நிபந்தனை ஜாமினில் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், வீட்டில் தவறி விழுந்து காயமடைந்த பரமசிவம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 11-ம் தேதி நரம்பு சம்பந்தமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதால்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #Madurai #MaduraiNews #TamilNaduNews #Police #PoliceInvestigation #PoliceAllegation
