

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. இதனை, வரவேற்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் , நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, தெரிவித்திருந்தார். குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றுக்கருத்து கூறினால் வரவேற்போம் என கூறியுள்ளார். ஆனால், பொதுவெளியில் கூறுவது முதிர்ச்சியின்மையை காட்டுவது என்றும், ஏதோ லாபம் எதிர்பார்ப்பது போல் கருத்து சொல்லக் கூடாது என்றும், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என கூறியுள்ள அழகிரி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆதிக்க சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது போல் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது என்றும் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.