திருநங்கைகளின் நடனங்களுடன் களைகட்டிய கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா
விழுப்புரம் அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவுக்கு இணையாக, சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பிரம்மாண்ட மேடையில் நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில், திருநங்கைகள் கூட்டாக நடனமாடி மகிழ்ந்தனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள், திருநங்கைகள் என ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மணகோலத்தில் வந்த திருநங்கைகள், கூத்தாண்டவருக்கு மனைவியாக தங்களை பாவித்து பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். இதைதொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில், அலங்கார ஆடை அணிந்து, ஒய்யார நடையுடன் வந்த திருநங்கைகள் பார்வையாளர்களை அசரடித்தனர். பழனியை சேர்ந்த திருநங்கை தேன்மொழி, நாகூரைச் சேர்ந்த ரஃபியா, தஞ்சாவூரை சேர்ந்த சந்தியா ஆகியோர் மிஸ் கொத்தட்டைக்கான முதல் மூன்று பரிசுகளை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை ரேகா, எம்.எல்.ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
