தமிழகத்திலே முதல்முறையாக.. ஜல்லிக்கட்டில் புது டெக்னிக்.. இம்முறை வீரர்கள் கதிகலங்குவார்கள்
பொங்கல் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, சிறந்த Top Ten காளைகள் தேர்வு செய்யப்பட்டு, நவீன வசதிகளுடன் புதுவித பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும், அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீது ஆர்வம் கொண்ட இவர், தமிழகத்தின் சிறந்த 10 காளைகளை தேர்வு செய்து, சிவகங்கை மாவட்டம் ஆளவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.
பெருத்த திமில், கூரிய கொம்புகள், கம்பீரத்தோடு வலம் வரும் இந்த காளைகள், வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை கொண்டவை. மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டும்.
"பீமா, பாகுபலி, பேட்ட காளி, சோழன், அணில், செம்மல், கரிசல், கரிகாலன், புல்லட் செம்மறை" என இந்த காளைகளுக்கு செல்ல பெயர்களும் உண்டு.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் எந்த திசையில் இருந்து வருவார்கள் என்பதை அறிந்து கொள்ள, தமிழகத்திலேயே முதல் முறையாக மாடுபிடி வீரரை போன்ற பொம்மை ஒன்றை வைத்து, காளைகளுக்கு குத்து பயிற்சி வழங்கப்படுகிறது.
உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவு வழங்கி தயார்படுத்தப்படுகின்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பே காளைகளுக்கு ஏ.சியுடன் கூடிய கேரவன் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு, காளைகளை ஏற்றி இறக்க, அதி நவீன ஹைட்ராலிக் கதவுகளை கொண்ட பிரத்யேக வேன்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
இதுவரை நடைபெற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், கார், புல்லட், தங்கக் காசுகள் என பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து, சிவகங்கை சீமையின் வீரத்தை பறை சாற்றி வருகிறது.
சகல வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வரும் இந்த ஜல்லிக்கட்டு காளைகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
