ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை - கண்டெய்னர் லாரியில் கை வரிசை காட்டிய கும்பல்
சென்னை பூந்தமல்லி பகுதியிலுள்ள ஒரு செல்போன் கம்பெனியிலிருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் ஒரு கண்டெய்னர் லாரியில் ஒசூர் வழியாக மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கண்டெய்னர் லாரியை சதீஷ்குமார் மற்றும் அருண் ஆகியோர் ஓட்டிச் சென்றனர். ஒசூர் அருகேயுள்ள தேசியநெடுஞ்சாலையில் மேலுமலை என்ற இடத்தில் லாரி சென்றபோது ஒரு கார் மற்றம் லாரிகளில் வந்த மர்மநபர்கள் கண்டெய்னர் லாரியை மடக்கி ஒட்டுநர்களை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களின் கண்கள் மற்றும் கை, கால்களை கட்டி அருகிலுள்ள புதரில் வீசிவிட்டு கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றனர். பின்னர் அலகுபாவி என்ற இடத்தில் லாரி பழுதாகி நிற்பது போல நாடகமாடி அதன் உள்ளே இருந்த செல்போனை அந்த கும்பல் கடத்திச் சென்றது. இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் அளித்த தகவலின் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் ஒசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
