குழந்தை கடத்தல் வழக்கு - உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 24-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குழந்தை கடத்தல் வழக்கு - உயர்நீதிமன்றம் அதிருப்தி
Published on

கடந்த 2016-ம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலையில், நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த போது கடத்தப்பட்ட 2 குழந்தைகளை மீட்க கோரி, எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், குழந்தை கடத்தலை தடுக்க தனிபிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷஷாயி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குழந்தை கடத்தல் வழக்குகள் மீது விசாரணை நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அளிக்க தனி நிதியம் அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், 2 பேருக்கு மட்டுமே தலா 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், போதிய நிதி ஒதுக்கப்படாததுடன், குழந்தை கடத்தல் வழக்குகளில் அரசு தீவிரம் காட்டாமல் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் வரும் 24-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com