

வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆங்கிலேயர் ஆட்சியில், புத்தாண்டை ஒட்டி, சார்பு பணியாளர்கள், உயரதிகாரிகளுக்கு பரிசுப்பொருள் வழங்கியதாகவும், அது இன்றும் கடைபிடிக்க படுவதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டினார். உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்தே, பரிசுகள் வழங்கப்படுவதாக மனுவில் கூறிய சம்பத், பரிசுப் பொருள் கொடுப்பது மற்றும் பெறுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் உத்தரவிட்டது.