Festival | கோலாகலமாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா - ஆடுகள், கோழிகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ் ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15ஆம் தேதி இந்த திருவிழா நடைபெறும் நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி மாவிளக்கு ஏற்றுதல், கற்பூரம் காட்டுதல், சூறைத்தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகளை பக்தர்கள் நிறைவேற்றினர். மேலும் தாரை தப்பட்டை, மேளதாளங்கள், சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிரசு ஊர்வலத்தின் போது நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
