குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் - 3 பேரிடம் விசாரணை

திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு, அதனுள் உள்ளே மலம் உள்ளிட்டவை கொட்டப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் பள்ளியில் சாதி ரீதியான எந்த பாகுபாடும் இல்லாத சூழலில், மதுபோதை ஆசாமிகள் இதனை செய்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் தாலுகா போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் உரிய விசாரணை நடப்பதாக கூறினார். இதில் தவறு யார் செய்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com