

தமிழகத்தில் பல ஊர்களில் போலி கால் சென்டர்கள் நடத்தி பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
இரண்டு லட்ச ரூபாய் லோன் வாங்கி தருவதாக பலரிடம் கூறி, பரிசீலனை கட்டணமாக 35 ஆயிரம் ரூபாய் வசூலித்து, பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து மோசடி கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்த புகார்களின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், செம்பாக்கம், சென்னை அண்ணாசாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரை வேலைக்கு அமர்த்தி போலி கால் சென்டர்கள் நடத்திய பென்ஸ் சரவணன் , செல்வகுமார், ஜக்ரூதின், சலீம் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். ஜக்ரூதீன் மற்றும் சலீமை மத்திய குற்றப் பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பெருங்குடி மற்றும் திருவான்மியூரில் செல்வகுமாரின் கூட்டாளிகள் போலி கால் சென்டர் நடத்தி வந்ததை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் அண்ணா சாலையில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட செல்வகுமாரின் கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த ஜாவித், முகமது ஜாகீர்கான், கோகுலகிருஷ்ணன், ராஜ்குமார், ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.