

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், 15 நாட்களுக்கு உள்ளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், தற்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், மனுவுக்கு பதிலளிக்க 6 வார கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அரசு தரப்பும் கால அவகாசம் கோரிய நிலையில், மாநகராட்சி , நகராட்சிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.