நெஞ்சுவலியால் மயங்கிய ஓட்டுநர்..! பஸ்சை ஓட்டி உயிரைக் காத்த நபர்
பஸ் ஓட்டும்போது நெஞ்சுவலி - பயணிகளைக் காப்பாற்றிய ஓட்டுனரை காத்த நபர்
வேடசந்தூர் அருகே 40 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்றிய தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விஜயன் என்பவர், தேனி போடிநாயக்கனூரில் இருந்து திருச்சிக்கு சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கி வந்தார். பேருந்து வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் விஜயனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனாலும், வலியோடு பேருந்தை பத்திரமாக சாலையோரமாக நிறுத்திவிட்டு ஸ்டேரிங்கிலேயே மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், ஓட்டுநர் விஜயனை அதே அரசு பேருந்தின் மூலம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.
இந்த நிலையில், தனது உடல்நிலை மோசமான போது, பயணிகளின் உயிரைக் காத்த அரசு பேருந்து ஓட்டுனர் விஜயனையும், அவரை மீட்டு சிகிச்சைக்கு உதவிய தன்னார்வலர் செந்திலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
