தி.மலையில் `அம்புலி' போன்ற வினோத விலங்கு மனிதர்களை தாக்கியதா?
திருவண்ணாமலையில் மனிதர்களை வினோத விலங்கு தாக்கியதா? - அரசு விளக்கம்
திருவண்ணாமலையில் வினோத விலங்கு மனிதர்களை தாக்குவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு, கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான உயிரினம் உலவுவதாகவும், அது காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கியதாகவும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இது முற்றிலும் வதந்தி என, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. நீளமான நகங்கள், 4 விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், இதனை 'ஆடு மனிதன்' என்றும், வேற்றுக்கிரகவாசி என்றும், குறிப்பிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது 2011ம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படம் என்றும், திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
