

தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியா, மூன்றாவது பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆண் குழந்தை பெற்றெடுத்த அவர், அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது. பிரசவம் பார்த்தபோது மருத்துவர் இல்லாததாலும், அதேசமயம் அதிக ரத்தப்போக்கை செவிலியர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதாலும் பிரியா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், சம்பவம் குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.