

முகக் கவசத்தை பதுக்குவது, அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்றவை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தாலும், அவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கான முகக் கவசம் எனப்படும் சாதாரண, நான்- ஓவன் பச்சை நிற முகக்கவசம் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
தேவை அதிகரித்திருப்பதால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டாலும், முகக் கவசத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா நோயைத் தடுப்பதில், இந்த முக கவசம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும்? எந்த மாதிரியான முகக் கவசத்தை அணிவது என்பதில் மக்களிடம் குழப்பம் உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால், மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க, சாதாரண அறுவை சிகிச்சை முகமூடிகளை (surgical mask) பயன்படுத்தலாம் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக உள்ளது. சந்தையில், பல வகையான முகமூடிகள் இருந்தாலும், அதிகபட்ச பாதுகாப்பை என் 95 (N95) முகமூடிகள் அளிக்கும் என கூறப்படுகிறது. ஆனால், என் 95 முகமூடிகளை மருத்துவர்கள், செவிலியர்கள், அந்த நோயாளி ஆகியோர் மட்டும் அணிந்தால் போதுமானது என்பதால், எல்லோரும் என் 95 முகமூடியை அணியத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. என் 95 முகமூடிகளை வாங்கினால், அவற்றின் அளவை சரிபார்ப்பதுடன், அதை சரியாகவும் அணிய வேண்டும். முகமூடிகளைப் போலவே சிலர் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்கின்றனர்.
இந்த பழக்கம் தவறு இல்லை என்றாலும், இவற்றை மட்டுமே எப்போதும் பயன்படுத்துவது இந்த நேரத்தில் பாதுகாப்பானது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.