தடுப்பூசி செலுத்த வந்தவருக்கு நேர்ந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குன்னம்பட்டியை சேர்ந்தவர் மீனம்மாள். 65 வயதான இவர் கொரோனா தடுப்பூசி முகாமிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, தாங்களும் தடுப்பூசி முகாமிற்கு செல்வதாக கூறி மூதாட்டியை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, டீக்கடை ஒன்றில் நிறுத்தி, மூதாட்டிக்கு டீயும் பன்னும் வாங்கி கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் மூதாட்டி மயங்கியதால், அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தியை திருடி விட்டு, சாலையோரமாக படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த வழியாக வந்தவர்கள், மூதாட்டியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மூதாட்டி சாப்பிட்ட பன்னில், மயக்க மருத்து கலந்து கொடுத்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சியை வைத்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
