

சட்டப்பேரவையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு அறிமுகம் செய்தார். இந்த சட்ட மசோதாவிற்கு திமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திருத்த சட்ட மசோதாவில், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவர் ஆகியோர் செய்யும் கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க அலுவலர்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல தலைவர், துணை தலைவர் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்க தலைவரோ, அல்லது துணை தலைவரோ குற்றம் இழைத்ததற்கான சாட்சியம் இருக்கும் பட்சத்தில், அவர்களை ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம், அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாளை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.