

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர். முன்னதாக, காலை 6 மணி முதல், பயணிகளுக்கு காகித வடிவிலான பயண சீட்டுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, பயணிகள் வருகை அதிகரித்ததால், காலை 8:15 மணி முதல் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை, விமான நிலையம், அரசினர் தோட்டம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பழுது நீக்கும் பணி நடந்தது. அதன்பிறகு, காலை 10.30 மணி அளவில் இயந்திரங்கள் பழைய நிலைக்கு திரும்பியதால், 2 மணி நேரம் நீடித்த இலவச பயணம் முடிவுக்கு வந்தது.