

பரணூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்டதால், சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கச்சாவடியின் மூலதனச் செலவு முழுவதும் வசூலிக்கும் வரை, கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, கட்சி வாகனங்கள் மற்றும் விஐபிகளின் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பதால் தான், மூலதனச் செலவை வசூலிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்கள் மற்றும் சுங்கச்சாவடியில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து, மார்ச் 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.