தமிழ்நாடு
பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டம் : சென்னை செல்ல பேருந்து கிடைக்காததால் ஆத்திரம்
சென்னைக்கு செல்ல அரசு பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் காத்துக்கிடந்த பயணிகள், நள்ளிரவில் நடத்திய மறியல் போராட்டம், விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பேருந்து நிலையம் வெளியே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதே போல வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை மறித்தபோது, ஓட்டுநர்கள், பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பலனாக விழுப்புரத்தில் இருந்து மேலும் சில பேருந்துகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

