

சென்னை தாம்பரம் அருகே சேலையூர்-வேளச்சேரி சாலையில் பெருங்களத்தூரைச் சேர்ந்த மேரி ரோஸ்லின், நடுவீரப்பட்டைச் சேர்ந்த கலைவாணி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். சேலையூர் தனியார் வங்கி அருகே, அவர்கள் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து இருவர் மீதும் ஏறியது. இதில் இளம்பெண்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாநகர பேருந்தின் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சேலையூர்-வேளச்சேரி சாலை பள்ளங்களுடன் காணப்படுவதால், அங்கு அடிக்கடி விபத்து நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.