குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரசு தரப்பு சிறப்பு பெண் வழக்கறிஞரை ஆளுநர் உத்தரவின் படி பணிநீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் தனலட்சுமி. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக வாதாடி வரும் இவர், பாதிக்கப்பட்டவர்களுடன் சமரசம் செய்து வைப்பதாக கூறி மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டது. மேலும் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டதோடு, வழக்கை திரும்ப பெறக்கோரி சிறுமி தரப்பை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆளுநரின் உத்தரவின்படி தனலட்சுமியை பணி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.