``உடனடியாக கைது செய்யுங்கள்’’ - கோர்ட் அதிரடி
சென்னை CMDA-வின் உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக ரத்தினசபாபதி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக சாட்சியம் அளிக்க, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் இதுகுறித்த சம்மனை, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் தரப்பில் பெறப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் எனசென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
