

அம்மன் என்றால் அழகு... அதிலும் பட்டு உடுத்தி, மலர்கள் போர்த்தி, நித்ய அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மனை பார்க்க கண்கள் கோடி வேண்டும். இப்படி அத்தனை அம்சங்களையும் ஒன்றாக ஏந்தி திண்டுக்கல் நகரில் அருள்பாலிக்கிறாள் கோட்டை மாரியம்மன்.
சர்வ சக்தியும் கொண்டவள் அம்பிகை என நம்பும் பக்தர்கள் கோட்டை மாரியம்மனை தேடி வருகிறார்கள். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அம்மன் சுயம்புவாக உருவானதாக கூறப்படுகிறது. திப்பு சுல்தான் படை வீரர்கள் திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அம்மனுக்கு சிறு பலிபீடம் அமைத்து வழிபட்டதாக கூறுகிறார்கள். மலைக்கோட்டையில் காவல் தெய்வமாக,அருள்பாலிக்கும் அம்பாள் தங்களை காத்து வருவதாக நம்பிக்கை தெரிவிக்கும் பக்தர்கள் ஏராளம்.
காளியின் அம்சமான கோட்டை மாரியம்மன், அம்மை நோய்களை நீக்கி பக்தர்களுக்கு நற்பேறு வழங்குவதாக நம்பிக்கை உண்டு. கோயிலில் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றது. அம்மனை சாந்தப்படுத்த பூக்களால் அவளை பூஜிப்பது வழக்கம் என்பதால் இதை ஒரு பெரு விழாவாகவே கொண்டாடுகிறார்கள். அதேபோல் மாசி மாதம் 20 நாட்கள் நடக்கும் மாசித் திருவிழாவும் இந்த கோயிலில் பிரசித்தி பெற்றது. தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் கோட்டை மாரியம்மனை ஆடி முதல் நாளான இன்று தரிசிப்போம்...