"உயிரையே கொடுக்க வேண்டிய நிலை வந்தாலும்..’’ - முதல்வர் அதிரடி
மொழித்திணிப்புக்கு இடந்தராமல், தமிழைக் காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை வழியாக மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் சதியை உணர்ந்துதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதனை எதிர்ப்பதாகவும்,
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என ஆளுநர், புதுச்சரடு விடுவதாகவும் முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தி ஆதிக்கத்தால் தனது சொந்த மாநிலங்களிலேயே 25க்கும் மேற்பட்ட வட இந்திய மொழிகள் பேச்சுவழக்கையும், எழுத்து வடிவத்தையும் இழந்து அழிந்து போனதையும், அழிவின் விளிம்பில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய போது, அதனை வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆதரித்துள்ளதாக கூறியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர், தமிழ் மொழிக்கு உரிய மரியாதை தராமல், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியவர் என்றும், முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.
பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித்திணிப்புக்கு இடம்தராமல் ஆருயிரான தமிழைக் காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருப்பதாகவும்.
இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றும், சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மை மொழி என்றும் சொல்லி, இரண்டையும் திணிக்க நினைப்பதும், அவர்கள் சொல்கின்ற இரண்டுமே வடிகட்டிய பொய் என்பதையும் வரலாறு சொல்வதாகவும், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.