

சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர், தினகரன் அழைப்பின்பேரில், இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார். தினகரன் மனம் திருந்தி பேச வருகிறார் என தாம் நினைத்ததாகவும், ஆனால் அவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தம்மை சந்தித்தாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
"முதல்வராக ஆசைப்பட்டார் டி.டி.வி. தினகரன்"
நான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது, தினகரனும், பழனிசாமியும் பிரிந்து விட்டனர். ஆட்சி கவிழும் என்று தினகரன் தினமும் சொல்லிக் கொண்டிருந்தார். தினகரன் சந்திக்க விரும்புவதாக பொதுவான நண்பர் ஒருவர் தெரிவித்தார். நண்பரின் வீட்டில் நானும், தினகரனும் சந்தித்தோம். மனந்திருந்தி தினகரன் பேச வருகிறார் என நான் நினைத்தேன்.
முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னிடம் தினகரன் பேசினார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பின்னர்தான், இரு அணிகளும் இணைந்தன. தினகரனுடன் பேசியது ஜூலை மாதம் நாங்கள் இணைந்தது ஆகஸ்ட் மாதம். கட்சிக்குள் குளறுபடி செய்து, திருப்பரங்குன்றம் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். தினகரன் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது...